பச்சைய மழை - இன்போ அம்பிகா

அன்பின் மொழி பேசும் கவிதைகள்
சக உயிரின் மேல்,காதலின் மேல், இயற்கையின் மேல், விவசாயத்தின் மேல், அஃறிணைகளின் மேல், என காணும் அனைத்தின் மேலும் அதன் சுக வாழ்வுக்காய் அன்பைச் செலுத்த எண்ணும் கவிதைகள் நிறைந்திருக்கிறது.
விவசாயத்தின் பேரழிப்புக்கும் மறுமலர்ச்சிக்குமான கவிஞரின் குரல் பெரிதாக உயர்ந்திருக்கிறது.அவர்களது பக்கம் நின்று பேசக்கூட ஆளற்றுப்போய்க்கொண்டிருக்கும் வேளைகளின் அவர்களின் இன்னல்கள் கவிதைகளாகி நாம் தெரிந்தும் தெரியாமல் கடந்து போய்விட எண்ணுகிற நம் பாரா முகத்திலறைகிறது.
எளிய மொழியில் எந்த பூடகங்களுமற்ற வார்த்தை ஜாலங்களுமற்ற நேரடியாகப் புரிந்து கொள்ள முடிகிற கவிதைகள். இன்னும் சில வார்த்தைகள் மட்டும் கூர்மையாக வந்திருக்கலாம் எனத் தோன்றும் சில கவிதைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் உலக இயந்திரமாதலுக்கானதும் இதயமற்றுப் போயிருப்பதற்கானதுமான காத்திரமான எதிர்ப்பையும் என்றென்றைக்கும் கொண்ட மனதிலிருந்து துளியும் மாயாத காதலையும் அன்பையும் அத்தனை ஈரமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
பிடித்த கவிதைகள்.
ஊர்வந்து இறங்கிய
பின்னரும் என் மரக்கிளையில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
எனக்காக விட்டுச் சென்ற
உன் கையசைப்புகள்.
***
பூச்சிக்கொல்லி வாங்கி
மடியிறுக்கிக் கட்டியபின்
மீந்த சில்லறையில் பாம்புவெடி
வாங்கி கொளுத்தும் மகள்
பொங்கி வழியும் கரித்துகளுக்கு
சிரித்து மகிழ்கிறாள்
இனி வாழலாமென்ற
அரவம் படமெடுக்கிறது
என்னுள்
இதன் மூலமாகவே இயற்கைப் பாதுகாப்பிற்கும் விவசாய மறுமலர்ச்சிகும் காதலுக்கும் அவர் இத்தொகுப்பில் சரிபாதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார் எனப் புரிந்துகொள்ளலாம்.
பிள்ளை மனதுடன் இயற்கையுடனான ஒரு பயணத்தின் பரவச வாசிப்பனுபவம். வாழ்த்துக்கள்.

Comments