இருமுனை - தூயன்
எப்போதுமே ஒரு கதையின் களம் பழையதோ புதியதோ ஆனால் அது சொல்லப்படுகிற விதத்திலும் மொழியிலும் இதுவரை சொல்லாத மயக்கத்தை வரித்துக் கொண்டு தன்னைத் தானே வேறொன்றாக மாற்றிக் கொள்ள விழையும் . இந்தத் தொகுப்பின் கதைகள் இதுவரை சொல்லப்படாத கதைகளில்லையென்றாலும் கதைசொல்லும் பாங்கிலிருக்கும் நிதானமும் எழுதியிருக்கும் மொழியிலிருக்கும் புதுமையும் மிகவும் கவர்கிறது . காரணம் ஒரே ஒரு சொற்றொடர் கூட க்ளிஷேவாக இல்லை . திரும்ப வாசித்து மகிழச் செய்யும் புதிய புதிய விவரணைகளில் வாசிக்கும் போது கதைகள் நமக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது . வாசித்த 7 கதைகளுமே விடாது துரத்தும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் போது ஆட்படுகிற அதீத மனவெழுச்சிகளுக்குள் அலைக்கழியும் மாந்தர்களைப் பற்றிய கதைகளே . இன்னொருவன் பஞ்சம் பிழைக்க மாநில எல்லைகளும் மனித மாண்புகளும் கடந்து வந்து பணிபுரியும் வடமாநிலத்தவரின் சுகதுக்கங்களை போதிய புரிதல்களோடு நாம் அணுகவும் உடலுழைப்பாளர்கள் என்ற மலின வெளித்தோற்றத்திலிருந்து அவர்கட்கும் மனமென்...